ஆதன்: நினைவுகளின் முன் என் குரல் நசுங்கிப் போகிறது. But my art is the photograph of my emotions. என் உணர்வுகளின் மேல் தான் நான் வண்ணம் தீட்டுகிறேன். பெரும்பாலும் எனது அச்சங்களே வட்டங்களாகவும் கோடுகளாகவும் ஆகின்றன. ஆழ்மனத்தின் இருட்டில் எதைப் பார்க்கிறேனோ அதையே வரைகிறேன். தூரிகையின் ஒவ்வொரு தீட்டலிலும் ஒரு இசைக்குறிப்பை ஒளித்து வைத்திருக்கிறேன். உலர்ந்த தீற்றல்களை நான் தொடும்போதெல்லாம் அவை துடித்தெழுந்து ஒலி எழுப்பும். என் ஓவியங்கள் அனைத்தும் என் உயிர்வண்ணங்கள். நீயும் என் சித்திரப்புனைவு இல்லையா அவ்வா ?
அவ்வை: ஒரு மரச்சட்டம் தான் உனது சித்திரங்களைத் தாங்குகிறது. இந்த மரச்சட்டம் இருக்கிறதே அதுவே தான் இச்சித்திரத்தின் சிறையும் கூட. என்னைத் தாங்கிச் சிறைப் பிடிக்க நினைக்காதே ஆதா. இழந்துவிடும் அச்சமே என்னைப் பிரிவதற்கான காரணம் ஆகிவிடும். யாரும் யாருக்கும் சொந்தம் இல்லை. நானும் நீயும் இப்பெருவெளியின் துணுக்குகள். உனக்குத் தெரியுமா ? இசை அண்டத்தின் அச்சாணியாக இருக்கிறது. மௌனம் இசையின் அடிக்குறிப்பாகக் கிடக்கிறது. நான் மௌனத்தின் ஆன்மாவாக உலவுகிறேன். ஆகவே ஆதா, பிரபஞ்சத்தின் பெருவெடிப்புக்கு முன்பான மௌனத்தைக் கொண்டு ஒரு பாடல் செய்வோம் வா !
No comments:
Post a Comment
கருத்துக்களம் - எல்லா கருத்துகளும் ஏற்றுக் கொள்ளக்கூடியதில்லை. ஆனால் பகிர்தலுக்கும் பகுத்தறிதலுக்கும் உரியது.