Thursday, March 25, 2010

நீரில் வளரும் வளையங்கள் - கவிதை


யார் 
நீரில் அதிக வட்டங்கள்
ஏற்படுத்துவதென்ற
நமக்கான போட்டி
குளத்துப் படிக்கட்டுகளில்
தாவியிறங்கிக் கொண்டிருந்தது

கூழாங்கற்களுக்கிடையில்
கவிதை வரிகளைத் தேடியெடுத்து
விட்டெறிந்ததெல்லாம்
என்னுடைய வளையங்கள்

நீ கண்ணசைத்த கண நேரத்தில்
யட்சனைப் போல
மழையொன்று வந்து
ஆயிரமாயிரம் வளையங்கள்
போட்டுச் சென்றது

உன் விழிவழிப்பார்வையினால்
திணைகளும் துறைகளும்
திசை மாறிப் போகுமென்ற
பிரபஞ்சத்தின் சூட்சுமத்தை
நீரில் வளரும் வளையங்களினூடே
அந்தப் பாசி படர்ந்த
படிக்கட்டுகளும் படித்துக் கொண்டன

-
அன்புடன்
அவனி அரவிந்தன்.

வெளியிட்ட யூத்புல் விகடனுக்கு நன்றி !
http://youthful.vikatan.com/youth/Nyouth/avaniaravindan08122009.asp