முன்னம்
ஒரு மிருகம் இருந்தது
தீரா வேட்கையுடன்
மனவிருட்சங்களின் அடிப்பொந்துகளில்
முள்வேலிகட்டி வசித்த
வாதை கொண்ட அப்பெருமிருகம்
வயிற்றை நிரப்ப அன்பை மட்டுமே உண்ணும்
முன்னம் ஒரு மிருகம் இருந்தது
பாசப்பசியெடுக்கும் போதெல்லாம்
அருகிலிருப்பவைகளின் கழுத்துகளை
தன் கோரப்பற்களுடன்
அது வெறித்துக் கொண்டிருக்கும்
..........................................................
கொடுத்துத் தீர்ந்தவைகளும்
காதற்கருமிகளும்
பற்தடங்களில்
கருநீல நிறத்திலான திரவம் வழிய
ஓடுபாதைகளில் குருதித் தடம்பதித்து
அலறி மறைந்தன
முன்னம் ஒரு மிருகம் இருந்தது
அடங்கா வேட்கைக்கு
ஆகா மருந்தான
தனிமையை தின்னத் தொடங்கியிருந்தது
அதுவும் தீர்ந்தபின்
நித்திய நோன்பிருந்த
அதன் தொண்டைக்குழியில்
கருஞ்சிலந்திகள் வலையிட்டிருந்தன
முன்னம் ஒரு மிருகம் இருந்தது
இப்போதெல்லாம்
ஏதேனும் நேசச்சொல் நெருங்கிவரின்
எலிகளின் மூத்திரவாடையடிக்கும் மூலைகளில்
அது மூச்சைப்பிடித்து ஒளிந்துகொள்கிறது....
No comments:
Post a Comment
கருத்துக்களம் - எல்லா கருத்துகளும் ஏற்றுக் கொள்ளக்கூடியதில்லை. ஆனால் பகிர்தலுக்கும் பகுத்தறிதலுக்கும் உரியது.