Saturday, September 28, 2013

நரகாசுரனும் நானும்


"தாத்தா இருக்காரா ?"
என்ற கேள்வியைச் சுமந்து 
ஓடி வந்த பிஞ்சு விரல் 
என் கன்னத்தை வருடுகிறது
மூச்சின் வெப்பத்தை 
பதிலாக அள்ளிக் கொண்டு
கொலுசுச் சலங்கைகள் அதிரும்படி
பட்டாசுகளை பற்ற வைக்க 
பரபரத்து ஓடியது

மரணத்தைப் போற்றும் பொன்னாளில் 
என் உலக விடைபெறுதலை
ஒத்திவைத்திருக்கிறேன் உற்றவர்களுக்காக
அவ்வகையில் 
நரகாசுரன் மட்டுமல்ல 
நானும் தான்
இன்றைய திருநாளின் திரி

பலகாரங்களும் பிள்ளைகளும்
எண்ணையில் குளித்த மணத்தை
என்னால் நுகர முடிந்தது
நான் இன்னும் குளிக்கவில்லை
படையலுக்கு வைத்த பணியாரம் போலவே
கிடத்தி வைத்திருந்தார்கள் என்னையும்
பண்டிகையின் பகல் பொழுது
பிரித்தெடுத்த வெடிச்சுருளாக
வெறுமையுடன் கழிந்ததெனக்கு

விளக்குகளால் பின்னப்பட்ட வாசலில்
என் பேத்தி பட்டுப் பாவாடையணிந்து நிற்கிறாள்
அவள் பாதங்களிடையில் விழுந்து மரணிக்கும்
மத்தாப்புகளை உதிர்த்த கம்பியில்
என் தீபஒளி கரைந்து கொண்டிருக்கிறது

நிலவில்லாத இருண்ட வெளியை
பெரும் ஓசையுடன் மலரும்
கணக்கில்லாத ஒளிப்பூக்கள்
கணநேரம் அலங்கரித்து மறைகின்றன

வேட்டுச் சப்தத்திற்கு மிரண்ட நாயைப் போல
உயிரை இழுத்துப் போர்த்தியபடி
பின்னிரவில் 
படுக்கையின் மீது சுருண்டுகிடக்கிறேன்
கண் மயங்கும் நேரத்தில்
அழுந்த அடைத்த
கதவுகளுக்கு அப்பால்
வானத்தில் உயர்ந்து
கந்தக நெடியுடன்
வெடித்துச் சிதறுகிறேன் நான் !

- அவனி அரவிந்தன்

No comments:

Post a Comment

கருத்துக்களம் - எல்லா கருத்துகளும் ஏற்றுக் கொள்ளக்கூடியதில்லை. ஆனால் பகிர்தலுக்கும் பகுத்தறிதலுக்கும் உரியது.