Saturday, September 28, 2013

ஓடற்ற நத்தை


வழமையாகக் கழியும் தினங்களில் 
கரியைத் தோய்த்தது 
வானவிழ்த்த நீர்த்திரைகள்

நனைந்த மேனிகளை விட்டு
நழுவிக் கலைந்தன 
சில ஆழ்ரகசிய நிறங்கள் 

விளக்கணைத்த 
வீட்டுக் கதவுகள் வழியாக 
சிதறிய திரவத்திவலைகளை
எதனுடன் உருவகப்படுத்துவதென
தீர்க்கமாக யோசிக்கிறது
ஒவ்வொரு வாசலிலும்
விழுந்துறங்கிக் கொண்டிருக்கும் வீதி

பாதையோரப் பள்ளங்கள் 
குவித்த நீரில் 
பதுங்கியபடி துரத்துகிறது
புசித்த பின்னும் 
மீதமிருக்கும் பசியையொத்த
எனது பாதி பிம்பம்

சிறு சாரல் மழையின்
சங்கேத முணுமுணுப்புகளுக்கு
இருசெவிகளையும்
இரவல் கொடுத்தவாறு
ஒத்தையாய் ஊர்கிறது
நெடிய இரவு
சந்தடி மிகுந்த
சாலையைக் கடக்கும்.
ஓடற்ற நத்தையைப் போல !

- அவனி அரவிந்தன் 

No comments:

Post a Comment

கருத்துக்களம் - எல்லா கருத்துகளும் ஏற்றுக் கொள்ளக்கூடியதில்லை. ஆனால் பகிர்தலுக்கும் பகுத்தறிதலுக்கும் உரியது.