Sunday, June 14, 2009

அழகுகள் ஆறு

நம்ம அண்ணாச்சி என்னைய அழகைப் பத்தி எழுத சொல்லிருக்காரு. என்ன அழகுல அத எழுத போறேன்னு தெரியல. நல்ல வேளை கைல எழுத சொல்லல. அப்புறம் என் தலைஎழுத்தோட அழகு ஊருக்கே தெரிஞ்சி போய் சந்தி சிரிச்சிருக்கும். நமக்கு இந்த தலைப்பு குடுத்து எழுத சொல்றது எல்லாம் பள்ளிக்கூடத்துலயே ஆகாது. பத்தாவது படிக்கும் போது கூட க்ரியேட்டிவ் ரைட்டிங்குனு ஒண்ணு வச்சாய்ங்க. அதுக்கு 'ஒரு ஊர்ல பாட்டி பீட்ஸா(லேட்டஸ்ட் வெர்சன்) சுட்டு வித்தாங்க, காக்கா தூக்கிட்டு போச்சு...... அப்புறம் காக்கா மேல கம்ப்ளெய்ன்ட் குடுத்தாங்க'னு தலைய சொரிஞ்சிக்கிட்டே ஒரு மணி நேரம் யோசிச்சு எழுதுனேன்.

அழகுன்னு சொன்னதும் சட்டுனு எனக்கு தோணுனத இங்க எழுத முடியாது. அதுனால செத்த நேரம் யோசிச்சு, கண்டது கழியத எல்லாம் ஒதுக்கி வச்சிட்டு நம்ம வாழ்க்கைல உண்மையான அழகு எதுல இருக்குனு ஒரு முடிவுக்கு வாரதுக்கு முயற்சி பண்ணிக்கிட்டு இருக்கேன். சொல்லப் போனா அழகுங்கறது பார்க்கிற பார்வைல தான் இருக்கு. சில பேருக்கு அழகா தெரியறது சில பேருக்கு சாதாரணமா தெரியும். உதாரணத்துக்கு சொல்லனும்னா கோவை சரளாவுக்கு கோவில் கட்ற கூட்டமெல்லாம் இங்க இருக்கு. அவய்ங்களுக்கு அவங்க அழகு. குழந்தைகள் உலகம் தான் இருக்கறதுலயே ரொம்ப அழகு. அப்புறம் பொதுவா சொன்னா புதுப்பொண்ணு, புது நெல்லு, புது வீடுன்னு புதுசா இருக்கிறது சிலது அழகு. பழைய சாதம், நேத்து வச்ச மீன் கொழம்பு, பழங்கால கோவில்கள்னு பழசும் சிலது அழகு. இதெல்லாம் விட்டுட்டு எனக்குனு தனியா அழகா தெரியற விஷயங்கள பட்டியல் போடப் போறேன்.

1. தனிமை
'இனிது இனிது ஏகாந்தம் இனிது...' - ஒரு சமயம் யாரு பக்கத்துல வந்தாலும் கடிச்சு வைக்கலாம் போல இருக்கும். ஒரு பிரச்சனையா நமக்கு இருக்கு. அமெரிக்கால எவனாவது அடி வாங்குனா இங்கன நமக்கு வாங்காகி போய்டுது. சீரியல்ல வார மாமியார் மருமகள திட்டுனாலும் இங்க நம்மள தான் தாலியறுக்குறாய்ங்க. இந்த மாதிரி இக்கட்டான சூழ்நிலைல எங்கிட்டாவது ஓடிப் போய்டலாம்னு இருக்கும். அப்போல்லாம் தனியா அமைதியா இருக்கிற எடங்களுக்கு போனா பிரச்சனைக்கு தீர்வு கெடைக்காட்டியும், ஏதோ மனசுனாலும் கொஞ்சம் மட்டுப் படும். எரிமலையா எகிறி குதிக்கிற எண்ணங்கள் எல்லாம் தனிமைல தண்ணியடிச்சிட்டு மல்லாந்திரும். எவ்வளவு தான் நாம பெத்தவங்க கூடவும், சொந்தக்காரய்ங்க கூடவும், கூட்டாளிகள் கூடவும் ஒண்ணுமண்ணா பழகுனாலும் சரி கட்ட கடைசி முடிவு பண்றது நாம தான். என்ன தான் எம் பொண்டாட்டி பேச்சுக்கு மறுபேச்சு பேச மாட்டேன்னு வீர வசனம் பேசுனாலும் அவனவன் தனித்தனியா தான் எதயும் யோசிக்கிறான். இதான் உண்மை. இந்த ஞானம் எல்லாம் அப்பப்போ நமக்கு வாரது தனியா உக்காந்து யோசிக்கும் போதுதான். பல உன்னதமான எண்ணங்கள்லாம் அப்போ தான் எனக்கு தோணும். அந்த நேரம் என்ன பத்தி, மத்தவங்கள பத்தி, ஊரு ஒலகத்த பத்தியெல்லாம் யோசிச்சு யோசிச்சு தன்னை மறந்து இந்த ஒடம்புல இருந்து வெலகி எங்கயோ பறந்து திரிஞ்சு திரும்பி வாரது எம்புட்டு அழகுன்னு நெனைக்கிறீங்க :)
கஞ்சா ஏதும் அடிப்பேனோனு சந்தேகப் படாதீங்க மக்களே ! நான் ரொம்ப நல்லவன்.

2. கனவு
கனவுகள் கலர் கலரா வர்றதுக்காகவே அதிக நேரம் தூங்கறவன் நான். சினிமால கூட கனவுப்பாட்டு வச்சி தான் வெளிநாடு எல்லாம் சுத்தி காட்றாய்ங்க. பொரண்டு பொரண்டு படுத்தாலும் தாம்பரத்த தாண்ட மாட்டேங்குது நம்ம கனவு. வாழ்க்கைல நடக்காத சில விஷயங்கள் இல்ல நடக்கணும்னு நாம ஆசைப் படுற விஷயங்கள் தான் பெரும்பாலும் கனவா வருது. நானும் நெனச்சி நெனச்சி பார்க்குறேன் இந்த திரிஷா மட்டும் கனவுல வர மாட்டேங்குது, யாராவது கொஞ்ச(ம்) சொல்லுங்களேன். பறக்கிற மாதிரி, தண்ணில (அந்த தண்ணி இல்ல !) நடக்கிற மாதிரி, பள்ளிக்கூடத்துல சண்டை போட்டவன கனவுல(மட்டும் தான்) போட்டு அடிக்கிற மாதிரி, சில சமயம் மெகா சீரியல் போல மொத நாள் வந்த கனவு மறுநாள், விட்ட எடத்துல இருந்து தொடரும். ஆனா விளம்பரம் எல்லாம் வராதுங்க :) கனவுகள் வாழ்க்கைக்கு வண்ணம் சேர்க்கும். இப்போல்லாம் படுத்து பத்து எண்ணுறதுக்குள்ள தூக்கம் ரொங்குது :)


3. பூக்கள்
பூவ பத்தி எழுதாத கவிஞருங்க எத்தன பேருன்னு எனக்கு தெரியல. அப்பிடி இருந்தா சொல்லுங்க. ஒவ்வொரு பூவும் ஒவ்வொரு அழகுங்க. எங்க தோட்டத்துல பிச்சிப்பூ கொடி பரத்திருப்போம். கடந்து போறப்போ நின்னு ரசிக்காம போறவங்க கெடையாது. பொன்னு வைக்கிற எடத்துல பூவ வைக்கலாம்னு சொல்லுவாங்க. எவ்வளவு நகைய அள்ளிப் போட்டாலும் ஒரு முழம் மல்லியோ கனகாம்பரமோ வச்சிட்டு வர்ற அழகு வராது. பூக்கள பார்க்கும் போது சிரிக்கிற மாதிரியே இருக்கும். 'எதுக்குடா கவலைப் படுற ? என்னை பாரு... இத மாதிரி சிரி, எல்லாம் சரியா போகும்'னு சொல்லும். நானும் சரின்னு அடுக்கு செம்பருத்திய பார்த்து சிரிச்சிக்கிட்டே நிப்பேன். தெருல போறவன் எல்லாம் பாவம் இந்த வீட்டுப் பையன் ஒரு மாதிரி போலங்கற மாதிரி பாப்பாய்ங்க. அவங்களுக்கு தெரியாது செம்பருத்தி என்கிட்ட என்னவெல்லாம் பேசும்னு.

4. மழை
புரட்டாசி மாசம் அடை மழை பொரட்டி பொரட்டி எடுக்கும். அப்போல்லாம் பள்ளிக்கூடத்துக்கு திடீர் திடீர்னு லீவு விட்டிருவாங்க. ஒரே ஆட்டம் தான். தினுசு தினுசா கப்பல் செஞ்சு விடுறது. மீன்னு சொல்லி தலப்பெரட்டைய பிடிச்சிட்டு வாரது. வேணும்னே மழைல நனைஞ்சிட்டு அம்மாக்கிட்ட பொய் சொல்றது. எல்லாம் அழகா இருக்கும். வெளில மழை வரும் போது வீட்ல சூடா பஜ்ஜி சுட்டு டீ போட்டு தருவாங்க. மத்த சமயம் அத சாப்பிட அடம் பிடிப்பேன். ஆனா மழைக்காலத்துல அது அமிர்தமா இருக்கும். மழைல நனைஞ்சா உடம்புல மனசுல இருக்கிற அழுக்கெல்லாம் அடிச்சிட்டு போய்டும். அதுக்காக வீட்ல குளிக்காம வானத்தயே வெறிச்சு பார்த்துக்கிட்டு உக்காந்திருக்க கூடாது, போங்க போய் சோப் போட்டு குளிங்க. பாத்தீங்கன்னா இந்த மழைக்காக மாரியாத்தாக்கு பூசையெல்லாம் போடுவாய்ங்க, கழுதைக்கு எல்லாம் கல்யாணம் பண்ணி வைப்பாய்ங்க அப்புறம் மழை வந்தா இழுத்து மூடி வீட்டுக்குள்ளார உக்காந்துக்குவாய்ங்க. நமக்கெல்லாம் உச்சில இருந்து உள்ளங்கால் வரைக்கும் நனைஞ்சிடனும் அதான் அழகு.

5. மனம்
'அட மனசு தாங்க அழகு'ன்னு சொல்றவங்கலாம் இங்க வாங்க. மழை பெய்ய வைக்கிற ஒண்ணு ரெண்டு நல்ல மனசுக்காரங்க எல்லா ஊர்லயும் இருக்காங்க. அவங்கள சந்திக்கிற வாய்ப்பு கெடச்சா அப்போ தெரியும் மனசோட அழகு. கொஞ்சம் மாறுனா நாம கூட அந்த பட்டியல்ல சேரலாம். மத்தவங்க மனச புரிஞ்சிக்கிட்டு அன்பா ஆதரவா பேசறதுக்கும் ஒரு மனசு வேணும். பஸ்சுல கப்பல் கவுந்தாப்ல கன்னத்துல கை வச்சி உக்காந்திருக்கும் போது, பக்கத்துல இருந்து பெரிசு ஒண்ணு அறுவைய போட ஆரம்பிக்கும். அறுவையா இருந்தாலும், அவங்க மனசு அருமையான அழகு. யாருன்னே தெரியாட்டியும் ஆதரவா பேசணும்னு அவங்களுக்கு மட்டும் தான் தோணும். அடுத்தவன் கீழ விழுந்தா கை குடுத்து தூக்கி விடாம, தாண்டிக் குதிச்சு வேகமா முன்னாடி போகணும்னு நெனக்கிற இந்த ஒலகத்துல மனசு அழகானவங்க சிலர் இருக்கத் தான் செய்றாங்க.

6. நேர்த்தி
அச்சுக் கோர்த்தாப்ல எழுத்து, உயிரோட்டமான ஓவியம், வரிசை தப்பாம அடுக்கி வச்ச மண்பானை, தொட்டா சிணுங்கும் கோவில் சிலை... இப்பிடி மனுசனோட ஒவ்வொரு படைப்புலயும் ஒரு நேர்த்தி(Perfection) இருக்கும் போது அது அழகா மாறிடுது. நாமளே ஏதோ ஒரு பொருள் வாங்கறோம் அதுல இல்லாத ஓரத்துல எல்லாம் கண்ண விட்டு நோண்டி எங்கயாவது ஒரு சின்ன பிசிறு இருந்தா கூட 'என்னா ஓட்டைய குடுத்து ஏமாத்த பாக்குறியா ? வேற குடுய்யா'னு கடைக்காரன ஏசிட்டு, வாங்கிட்டு வருவோம். ரெண்டு நாள்ல அது பரணைல கெடக்குதா, குப்பைத் தொட்டில கெடக்குதான்னு யாரு பாத்தா. வாங்கும் போது நமக்கு அழகா இருக்கனும். பார்க்க அழகா இருந்தா நம்ம ஆளு கை நெறயா கழுதவிட்டையும், பை நெறயா பருத்திக்கொட்டையும் வாங்கிட்டு வந்திடுவான்.

எனக்கு அறிவு கம்மி தான். 'இதெல்லாம் அழகுன்னு யாரு சொல்லுவா ?' அப்பிடினு நெனைக்கிறவங்க 'ஆறு அழகுகள்'னு தலைப்பிட்டு...... கமெண்ட்ல போடுங்க :)

No comments:

Post a Comment

கருத்துக்களம் - எல்லா கருத்துகளும் ஏற்றுக் கொள்ளக்கூடியதில்லை. ஆனால் பகிர்தலுக்கும் பகுத்தறிதலுக்கும் உரியது.