Wednesday, August 19, 2009

நாணயத்தின் மறுபக்கம்

உண்மையச் சொல்லனும்னா நம்ம மக்களுக்கு இளைஞர்கள் மேல கொஞ்சம் கூட நம்பிக்கை கெடையாதுங்க. ஏன் ? அவங்க அவங்க புள்ளைங்க மேலயே அவங்களுக்கு நம்பிக்கை கெடையாது, அப்புறம் எப்பிடி ஊரான் வீட்டு புள்ளைங்க மேல நம்பிக்கை வைப்பாங்க ? ஒவ்வொரு வீடும் குட்டி நாடு போலத்தான். அதுல ஒவ்வொரு இளைஞனும் மொத்த இளைய சமுதாயத்தோட பிரதிநிதி. 'Charity begins at home' 'Even politics begins at home'.

வெள்ளனமா எந்திரிக்கிறது இல்ல. சாப்பிடறதுக்கு முன்னாடி குளிக்கிறது இல்ல. ஒரு சாமான் உருப்படியா வாங்கத் தெரியாது. வெத்தலை வாங்கியாரச் சொன்னா சுண்ணாம்பும் சேர்த்து வாங்கனும்னு தெரியாது. கால்குலேட்டர் இல்லாம கணக்கு போடத் தெரியாது. ஒரு கேள்வி கேட்டா பதில் சொல்றதுக்குள்ள விடிஞ்சு வெள்ளக் கோழி கூவிடும். இதுங்க தான் நாளைக்கு குடும்பத்த காப்பத்த போகுதா ? குடும்பத்தையே காப்பாத்த முடியாதவைய்ங்க எப்பிடிய்யா நாட்டைக் காப்பாத்துவாய்ங்க.

ஒவ்வொரு வீட்டுக்குள்ளயும் இதே பொலம்பல் தான். அந்த பொலம்பல்கள மொத்தமா புறந்தள்ளவும் முடியாது. 'காரியக்காரன் காரணம் சொல்ல மாட்டான்'னு சொல்லுவாங்க. நம்ம பயலுக காரணம் சொல்றத மட்டும் கேக்கணுமே.

கே: "ஏண்டா வீட்டுல எல்லாம் மதிய சாப்பாட்டுக்கு உக்கார்ற சமயத்துல எந்திரிக்கிற ?"
ப: "ரெண்டு மாசம் கழிச்சு பரிட்சை வருது அதான் முழிச்சு படிச்சிட்டு இருந்தேன்"
(கிழிச்ச நீ !)

கே: "என்னடா நீ கடைக்கே போறதில்ல, அப்பிடியே போனாலும் சூத்தை கத்திரிக்காயா வாங்கிட்டு வந்திருக்க ?"
ப: "நான் வாங்கும் போது எல்லாம் நல்லாத்தான் இருந்துச்சு"

கே: "நைட்டு முழுக்க படிச்சியேடா மார்க்கு மட்டும் ஏன் இம்புட்டு கம்மியா இருக்கு ?"
ப: "எனக்கு என்ன தெரியும் எவ்வளவு நல்லா எழுதுனாலும் எனக்கு மட்டும் கம்மியாத்தான் போடுறாய்ங்க. கஞ்சப்பயலுக !"

நாமல்லாம் 'ரமணா' படத்தைப் பார்த்து சிலுத்துக்குவோம். ஆனா நம்ம வேலைய செய்றதுக்கே வேற ஆள தேடுவோம். 'கப்பல் நெறையா பொண்ணு வருதுன்னு சொன்னா, எனக்கு ரெண்டு என் தம்பிக்கு ரெண்டு'ன்னு சொல்லுவாய்ங்களாம். அது போல இலவசமா எதக் குடுத்தாலும் 'ஈ'ன்னு பல்ல இளிச்சிட்டு வாங்கிட்டு நின்னோம்னு வைங்க, குனிய குனிய கொட்டிட்டே தான் இருப்பாய்ங்க. நாலு எடத்துக்கு போக வர இருந்துக்கனும். நாமளே கேட்டுத் தெரிஞ்சு ஏதும் செய்யனும். சீனத்துல ஒரு பழமொழி இருக்குங்க. 'ஒருத்தன் இரவலா ரெண்டு மீன் கேட்டா அவனுக்கு குடுக்காத. ஆனா மீன் பிடிக்க கத்துக்குடு'. நாம் இரவலுக்கு நிக்க போறோமா ? இல்ல மீன் பிடிக்க கத்துக்க போறோமா ? இம்புட்டு வக்கனையா பேசுறியே நீ என்னத்த கிழிச்சன்னு படிக்கிற பத்துல பதினொரு பேரு கேக்குறது காதுல விழுது. நான் புரட்சியெல்லாம் பெருசா பண்ணல. 2 வீலர் லைசன்ஸ் தான் வாங்குனேன். யாருக்கும் லஞ்சம் குடுக்காம, ஒழுங்கா எட்டு ரெண்டு தடவை போட்டு. ஒரு வருசம் அலைஞ்சு வாங்குனேன். ஆனா லைசன்ஸ் வாங்கிட்டு அப்புறம் நாலு பேருக்கு பார்ம் எழுதிக்குடுத்துட்டு ப்ராசஸ் எல்லாம் எப்பிடி ? ஒரு மாசத்துலயே லைசன்ஸ் எப்பிடி வாங்குறதுன்னு விளக்கமா சொல்லிக்குடுத்துட்டு வந்தேன். ஏன்னா எனக்கு தான் அவைங்க என்ன என்ன நொள்ளை சொல்லுவாய்ங்கன்னு நல்லா தெரியும்.

மொத்தமா சேர்ந்து ஒரு காரியம் பண்ணனும்னா ரொம்ப பக்குவமா பதவிசாத்தான் இருந்துக்கனும். ஒண்ணு பட்டாச கொளுத்துனாப்புல பட படன்னு பேசுறது. இல்லாட்டி வாயில வசம்ப வச்சி தேய்ச்சா மாதிரி திரு திருன்னு முழிக்கிறது. ஒருத்தன் ஒரு கருத்து சொல்லிட்டா போதும். 'ஏன் உங்களுக்கு தான் எல்லாம் தெரியுமோ நாங்கள்லாம் என்ன கேணப்பயலுகலா ?' அப்பிடின்னு கேப்போம். தப்போ, சரியோ எல்லாம் ஏத்துக்கற மாதிரி ஆதாரத்தோட சொல்லலாம். வார்த்தைகள்லயும், எண்ணங்கள்லயும் தெளிவு ஏற்படுத்திக்குவோம். சிந்தனையையும், செயல்திறனையும் வளர்த்துக்குவோம். தலைவன்னு சொன்னா ஆயிரம் பேரு இருந்தாலும் அம்புட்டு பேரையும் ஆட்டி வைக்கவும் தெரியனும், அனுசரிக்கவும் தெரியனும்.

வேகத்தோட விவேகமாவும் இருக்க கத்துக்குவோம். அரசியல்வாதிங்க இருக்காய்ங்களே நாம் கொஞ்சம் யோசிச்சு ஏதாச்சும் கேள்வி கேட்டம்னு வைங்க. ஒடனே கஞ்சா கேஸ்ல போட்டு உள்ள தள்ளிருவாய்ங்க. அதெல்லாம் எப்பிடி சமாளிக்கிறதுன்னு தெரிஞ்சிக்கனும்.

"பல வேடிக்கை மனிதரைப் போலே, நான் வீழ்வேனென்று நினைத்தாயோ ?" - பாரதி

பி.கு: இந்த ஒரு பதிவுல உலகத்தை மாத்திடலாம்னு நான் நினைக்கல. தெரிஞ்சவங்களுக்கும் தெரிஞ்சுக்க விரும்பாதவங்களுக்கும் சொல்லத் தேவையில்ல. இது முழுக்க முழுக்க என்னோட கருத்து.

No comments:

Post a Comment

கருத்துக்களம் - எல்லா கருத்துகளும் ஏற்றுக் கொள்ளக்கூடியதில்லை. ஆனால் பகிர்தலுக்கும் பகுத்தறிதலுக்கும் உரியது.