Wednesday, December 8, 2010

கொண்டாட்டம்

'குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்' - இருக்கும்ல ! பயலுக்கு(நம்ம முருகன் தான் !) மொத மொத கல்யாணம் நடந்த இடம்ல அதுனால கொண்டாட்டமா தான் இருக்கும். பின்னாடி அவரு வள்ளினு ஒரு 'ஷாமியோவ்' டிக்கட்ட கரெக்ட் பண்ணி சைடுல சேர்த்துக்கிட்டது தனி கதை. சாமி செஞ்சா தப்பில்லையாம், ஆசாமி செஞ்சா தப்பா ? சொல்லுங்கண்ணே தப்பா... ?


சரி உணர்ச்சிவசப்படாம கதைக்கு வருவோம்.முருகன் கோவில் மலையை
ஒட்டி கட்டிருப்பாங்க. மலைக்கு பின்னாடி குடவரைக் கோவில் ஒன்னு இருக்கு. நாங்க எங்க வள்ளிகள், சுள்ளிகள் எல்லாம் பத்தி பொரணி(பரணி இல்லீங்க !) பேசுறது அங்கன உக்கார்ந்து தான். எனக்கு ஒரு நண்பர் இருக்காரு. அவருக்கு திருப்பரங்குன்றம் தான் ஊரு. வார கடைசினா மலைக்கு பின்னாடி இருக்கற அந்த கோவிலுக்கு போய் மரத்தடில பட்டறைய போட்ருவோம். காத்து நல்லா சிலுசிலுனு அடிக்கும். மயில் நிறையா வரும். சில சமயம் தோகை விரிச்சி ஆடுறத கூட பாத்திருக்கோம். பேச ஆரம்பிச்சா படிப்பு, காலேஜ், வீடு எல்லாம் கடந்து பேச்சு கடைசி கன்னியை பத்தி தான் வந்து நிக்கும்.


"மச்சான் ! வனிதா கூட பெரிய சண்டை டா"னு ஆரம்பிப்பான். "யாரு திருநகர் மூணாவது ஸ்டாப் அனிதா வா ? என்னா சொல்றா ? அவங்கப்பன் ஏதும் கரச்சல் குடுக்றானா ? சும்மா சொல்றா பசங்க கிட்ட சொல்லி தூக்கிருவோம்"னு பெரிய ஏரியா வஸ்தாது போல கேட்ப்பேன். இது வரைக்கும் சண்டைனு பெரிசா எதுக்கும் போனது இல்ல, இருந்தாலும் நாம தான் வாய்ச்சொல்லுல பெரிய வீரருல, அதுனால என்னா பிரச்சினைனாலும் இப்பிடிதான் கேட்க்குறது.

அவன் சலிச்சுக்கிட்டே, "இல்லடா அனிதா கூட சண்டை போட்டு நாங்க பிரிஞ்சு ஆறு மாசமாச்சு, இவ பாலாஜி நகர் ரெண்டாவது தெரு வனிதா. ட்யூஷனுக்கு என் கூட வருவா. உள்ள நுழைஞ்சவுடனே என்ன பார்த்துட்டு தான்டா நகருவா. இன்னைக்கு என்னாச்சுன்னே தெரியல என்னை பார்க்கவே இல்லடா"னு சொன்னான். கேட்டுக்கோங்க இதுக்கு பேருதான் 'பெரிய சண்டை'யாம். நானும் துன்பம் வரும் நேரம் தோழனுக்கு தோள் குடுக்கணும்னுட்டு ஆதரவா,"உன் ட்யூஷன் தானடா ஏன் பார்க்கலைனு பட்டுனு கேக்க வேண்டியது தான"ம்பேன். அதுக்கு அவன்,"அவ கிட்ட இது வரை பேசுனது இல்லடா, அடுத்த புதன் கிழமை நல்ல நாளா இருக்கு பேசலாம்னு இருக்கேன்.பொண்ணு கிடைச்சாலும் புதன் கிடைக்காதுன்னு சொல்லுவாங்க, ரெண்டுமே சேர்த்து கிடைச்சா நல்லது தானடா"னு சொன்னான். 'அட மொன்ன நாயே ஒனக்கெல்லாம் பொண்ணே கிடைக்காதுடா'னு மனசுல நெனச்சிக்கிட்டு, "ஆமாண்டா மாப்ள"னு ஆமோதிச்சுக்குவேன். நமக்கு என்ன இருந்தாலும் நட்பு தான முக்கியம் !
(மனசாட்சி - "ஏன்டா நண்பனோட அந்தரங்கத்த இப்பிடி அப்பட்டமா அம்பலத்துல ஏத்திட்டியே... இதெல்லாம் உனக்கு ஒரு பொழப்பா...?)

இப்பிடிதாங்க பயபுள்ள ஒவ்வொரு வாரமும் ஒரு பொண்ணை பத்தி ஒரு கதை சொல்லுவான். அன்னைக்கு அசிங்கப்பட்டதுல இருந்து 'எந்த பொண்ணு, என்ன பண்ணுது'னு எதுவுமே நான் கேட்டுக்கிறது இல்ல. அங்கன பேசுறது அந்த ரகம்னு சொன்னா, பேசாமலே நேரத்த கடத்துறதுக்காகவும் திருப்பரங்குன்றம் போயிருக்கேன். காலேஜ்ல ரொம்ப கடுப்பேத்தினா, வெறுப்பாகிப்போய் வேலியேறி வெளில குதிச்சு அரை கிலோ மீட்டர் பஸ்ஸுக்கு நடந்து, பொளந்தெடுக்கிற மொட்ட வெயில்ல திருப்பரங்குன்றம் மலைக்கு போவேன். மலையுச்சில ஒரு தர்ஹா இருக்கு. அதுக்கு பின்னாடி
தெற்கு பக்கம் கைலாசநாதர் கோவில் ஒன்னு இருக்கும். அந்த பக்கம் மலை நெட்டுக்குத்தலா நிக்கும். அங்கன இருந்து எட்டிப் பார்த்தா தலையெல்லாம் சுத்தும். முத்துக்காளை மட்டும் பக்கத்துல இருந்தா 'செத்து செத்து வெளாடுவோமா ?'னு கேப்பாரு. கோவில் பாறை நிழல்ல, பக்கத்துல சுனை இருக்கறதால நல்லா குளிர்ச்சியா இருக்கும். ரொம்ப அமைதியாவும் இருக்கும். யாருமே இல்லாட்டி அப்புறம் அமைதியாத்தான இருக்கும். பூசாரியே போஸ்ட் லன்ச் செஸன்ல ஆப்ஸென்ட் ஆகிடுவாரு.

சாமி தனியா இருப்பார்ல அதான் பேச்சு தொணைக்கு நானும் அங்கயே செட்டில் ஆகிடுவேன். அங்கன உக்காந்து டிபன் பாக்ஸ்ல இருக்கற சாப்பாட
சாப்ட்டு மல்லாந்து படுத்தா சத்தியமா சொல்றேன் சொர்க்கத்துக்கே போனாப்ல இருக்கும். அப்டியே அந்த சொர்க்கத்துலயே சொக்கிப்போய் ஒரு ரவுண்டு சுத்திட்டு வீட்டுக்கு வந்தா மணி ஏழரை ஆகிப்போயிருக்கும். அப்போ தான் உண்மையான ஏழரை எனக்கு ஸ்டார்ட் ஆகும். கதவு தொறக்கிற சத்தமே யாருக்கும் கேக்காது. பரம்பரை திருடன் கூட கொஞ்சம் சத்தமா தொறப்பான்.

அம்புட்டு அமைதியா வீட்டுக்குள்ளார போனா, என்னப்பெத்த அம்மா,"ஏன்டா.. வெளக்கு வெச்சு அரை மணி நேரம் ஆச்சு, எவ கூட சுத்திட்டு வர..?"னு அர்ச்சனையோட வரவேற்பாங்க. 'நான் என்ன வேணாம்னா சொல்றேன். எவளும் கூட சுத்த வர மாட்ராளுங்க !'னு மனசுல நெனச்சுக்கிட்டே,"விக்கி வீட்டுக்கு புக் வாங்க போனேன்"னு மனசுல மடிச்சு வச்சிருந்த சக்கரப்பொங்கல்ல ஒன்ன எடுத்து விட்டுட்டு போய்ட்டே இருப்பேன். இப்போ நெனச்சுப் பார்த்தா இதுவும் ஒரு வகைல கொண்டாட்டம் தான். என்ன சொல்றீங்க.....?

(பி.கு - இந்த கட்டுரையில் வரும் நண்பனின் காதலிகளின்(?!) பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன !!!)

No comments:

Post a Comment

கருத்துக்களம் - எல்லா கருத்துகளும் ஏற்றுக் கொள்ளக்கூடியதில்லை. ஆனால் பகிர்தலுக்கும் பகுத்தறிதலுக்கும் உரியது.