Saturday, June 5, 2010

கண்ணாடிச் சிதறல்கள் - கவிதை



 
 
வீட்டின் முன்பகுதியில் நட்டிருந்த மூங்கில்கள்
பூவிட்டிருந்த ஓர் அதிகாலைப் பொழுதில்
கிரணங்கள் தீட்டிய சித்திரம் போல 
நீ வந்திருந்தாய்
என்னைத் தவிர 
மற்ற அனைவரிடமும் 
பேசிக்கொண்டிருந்த உன்னை 
பிரதியெடுக்க பிரயத்தனப்பட்டன
என் வீட்டின் 
நிலைக் கண்ணாடிகள் அனைத்தும்
ஆனால் கையலம்பும் குழாய்க்கு மேலே தொங்கும்
பழைய கண்ணாடிக்கு மட்டுமே 
அன்று யோகம் போல
உனக்கு அந்தக் கண்ணாடியை
நினைவிருக்குமா எனத் தெரியவில்லை
பச்சை நிறத்தில் சட்டம் கட்டியிருக்கும்
ஓரங்களில் லேசாக உப்புப் படிந்திருக்கும்
நேற்று முன்தினம் 
அந்தக் கண்ணாடி
அதை மாட்டி வைத்திருந்த ஆணியில் இருந்து 
கழன்று கீழே விழுந்து தெறித்தது !
இத்தனை நாட்களாக
உன் முகத்தை நினைவுகொள்ள முயன்று
தோற்றதால் இருக்கலாம்
சிதறிக் கிடந்த சில்லுகள் 
ஒவ்வொன்றையும் உற்றுப் பார்க்கிறேன் 
அவை
உன்னைத் தவிர வேறு எதையெதையோ
பிரதிபலித்துக் கொண்டிருக்கின்றன...!
-
அன்புடன் அவனி அரவிந்தன்.
வெளியிட்டதற்கு நன்றி காட்சி !

5 comments:

வால்பையன் said...

அவைகளும் உலகில் உள்ளன என காட்டத்தான் அந்த பிரதி பலிப்பு! எப்போ பார்த்தாலும் ரொமான்ஸ் மூடிலேயே இருக்ககூடாதல்லவா!

கமலேஷ் said...

ரொம்ப நல்லா இருக்கு நண்பரே...வாழ்த்துக்கள்...

Tamilparks said...

பிரமாதம் வாழ்த்துக்கள்

முனைவர் இரா.குணசீலன் said...

சில்லுச்சில்லாய் அழகு சிதறிக்கிடக்கிறது.

கவிநா... said...

//வீட்டின் முன்பகுதில் நட்டிருந்த மூங்கில்கள்
பூவிட்டிருந்த ஒரு அதிகாலைப் பொழுதில்
கிரணங்கள் தீட்டிய சித்திரம் போல நீ வந்திருந்தாய்//

அழகான உவமை.... வரிகள் கண்முன் காட்சிப்படுத்துகிறது.

//இத்தனை நாட்களாக
உன் முகத்தை
நினைவுகொள்ள முயன்று
தோற்றதால் இருக்கலாம்...//

அருமை சகோ... அழகான கவிதை...

Post a Comment

கருத்துக்களம் - எல்லா கருத்துகளும் ஏற்றுக் கொள்ளக்கூடியதில்லை. ஆனால் பகிர்தலுக்கும் பகுத்தறிதலுக்கும் உரியது.